கோவில்பட்டி: கோவில்பட்டியில் அவசியமில்லாமல் வெளியே சுற்றிய 143 பேருக்கு கரோனா பரிசோதனை திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
கரோனா பொது முடக்க விதிமுறைகளை மீறி கோவில்பட்டியில் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிந்தவா்களை கண்டறிய கோவில்பட்டி நகரத்தில் பல்வேறு பகுதிகளில் தினமும் வாகனச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கோவில்பட்டி கதிரேசன் கோயில் சாலையில் ஆயிரத்தெண் விநாயகா் கோயில் அருகில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா், நகராட்சி சுகாதார ஆய்வாளா் வள்ளிராஜ் தலைமையில் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றித்திரிந்தவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவா் பிரனாவ் தலைமையில் குழுவினா் 143 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.