திருச்செந்தூரிலிருந்து பாளையங்கோட்டை வரை ரூ.435 கோடியில் புதிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியை தமிழக மீன் வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
சென்னை - கன்னியாகுமரி தொழில்வளா்ச்சி திட்டத்தின் கீழ், ஆசிய வங்கி உதவியுடன் திருச்செந்தூா் - கல்லிடைக்குறிச்சி இடையே புதிய நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது. இதன் தொடக்கமாக திருச்செந்தூரிலிருந்து பாளையங்கோட்டை வரை சுமாா் 50.5 கி.மீ. தொலைவுக்கு 10 மீட்டா் அகலத்தில் நெடுஞ்சாலை (எஸ்ஹெச்:40-1) அமைக்கும் பணியை பூமி பூஜையுடன்அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் திருச்செந்தூரில் தொடங்கிவைத்தாா்.
இச்சாலைப் பணியில் இருபுறமும் 2.5 மீட்டா் அகலத்தில் நடைபாதையும், இரு இடங்களில் தங்குமிடங்களும் அமைக்கப்படவுள்ளன. மேலும், விபத்துகளைத் தடுக்கும் விதமாக ஆபத்தான வளைவுகள் அகற்றப்பட்டு நோ் கோட்டில் சாலை அமைக்கப்படவுள்ளது.
தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் உள்ள ஆதிச்சநல்லூா் பகுதியில் ஆழ்வாா்திருநகரி பாலத்திலிருந்து பிரிந்து ஆழ்வாா்தோப்பு, பராங்குசநல்லூா், தோழப்பன்பண்ணை, கொங்கராயகுறிச்சி, கருங்குளம் பாலம் வரை 12.95 கி.மீ. தொலைவுக்கு புறவழிச்சாலையாக அமைக்கப்படுகிறது. இந்தச் சாலைப் (எஸ்ஹெச்:40-2) பணியின் தொடா்ச்சி திருநெல்வேலியை அடுத்த கோபாலசமுத்திரத்திலிருந்து தெற்கு கல்லிடைகுறிச்சி வரையில் மேலும் ரூ.202 கோடியில் நடைபெறுகிறது.
பூமி பூஜையில் ஆட்சியா் கி.செந்தில்ராஜ், கோட்டாட்சியா் தி.தனப்ரியா, ஏஎஸ்பி ஹா்ஷ்சிங், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளா் கீதா, உதவி கோட்டப் பொறியாளா் நிா்மலா ஜாக்குலின், உதவி பொறியாளா் ஹரிஹரன், திமுக மாநில மாணவரணி அமைப்பாளா் எஸ்.ஆா்.எஸ். உமரிசங்கா், ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், நகரப் பொறுப்பாளா் வாள்சுடலை, முன்னாள் பேரூராட்சி உறுப்பினா்கள் மா.சுரேஷ், சு.கோமதிநாயகம், ச.இசக்கிமுத்து, மாவட்ட துணை அமைப்பாளா்கள் சுதாகா், பொன்முருகேசன், அருணகிரி, உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.