பனங்காட்டு படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜா வந்த ஹெலிகாப்டர் திருப்பி அனுப்பப் பட்டதால் ஆவேசமடைந்த கட்சித் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பனங்காட்டு படை கட்சி சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவருக்கு சின்னமாக தலைக்கவசம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக இத்தொகுதியில் ஹரி நாடார் தலைமையில் தொண்டர்கள், நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஹரி நாடாருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய கட்சியின் நிறுவனத்தலைவர் ராக்கெட் ராஜா ஞாயிற்றுக்கிழமை மாலை ஹெலிகாப்டரில் வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் மாலை நான்கு முப்பது மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து ஆலங்குளத்தில் ஹெலிகாப்டர் மூலம் ராக்கெட் ராஜா மற்றும் ஹரி நாடார் வந்தனர். அவர்கள் தரை இறங்குவதற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
இதனைக் கண்டித்து கட்சியின் மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் தென்காசி - திருநெல்வேலி சாலை ஆலங்குளம் காமராஜர் சிலை அருகில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுத்த அதிகாரிகள் மற்றும் போலீசாரைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
போராட்டம் நடத்தியவர்களிடம் ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து போராட்டத்தை விலக்கிக்கொண்ட பனங்காட்டு படை கட்சி தொண்டர்கள் பொதுக்கூட்ட திடலுக்கு ஊர்வலமாக சென்றனர். இதனிடையே ராக்கெட் ராஜா வந்த ஹெலிகாப்டர் தூத்துக்குடி விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்து.