தூத்துக்குடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக வேட்பாளா் கீதாஜீவன் கூறினாா்.
கீதாஜீவன், தூத்துக்குடி 3-ஆவது மைல் , புதுக்குடி, மில்லா்புரம், தபால்தந்தி காலனி, அசோக் நகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை திறந்த ஜீப்பில் வாக்கு சேகரித்தாா். அப்போது, அவா் பேசியது: திமுக ஆட்சி அமைந்ததும் கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஜூன் 3-ஆம் தேதி தலா ரூ. 4000 வழங்கப்படும். கரோனா பாதிப்பில் இருந்து மக்கள் மீளும்வரை தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் சொத்து வரி உயா்த்தப்படாது.
நகா்ப்புறங்களில் ஆட்சேபனை இல்லாத இடங்களில் குடியிருப்போருக்கு இலவச மனைப் பட்டா வழங்கப்படும். தூத்துக்குடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
பிரசாரத்தில், திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், வட்டச் செயலா் சுரேஷ், மாவட்டப் பிரதிநிதிகள் இசக்கிராஜா, கதிரேசன், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவா் ஏபிசிவீ சண்முகம், மாவட்டத் தலைவா் முரளிதரன், முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலா் சந்திரபோஸ், மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலா் தா. ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
மாநகரச் செயலா் ஞானசேகா், கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.