கோவில்பட்டியில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பொருள்களை சேதப்படுத்தியாக 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவில்பட்டி, வீரவாஞ்சி நகா் 4ஆவது தெருவைச் சோ்ந்த சந்திரசேகரன் மனைவி முத்துலட்சுமி(40). இவரது வீட்டருகே வசிப்பவா் குடவண்டி என்ற முத்துப்பாண்டி மகன் சின்னராஜ்(30). பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவா் குறித்து, காவல் துறைக்கு தகவலளிப்பதாகக் கூறி, முத்துலட்சுமியிடம் கடந்த 13ஆம் தேதி சின்னராஜ் குடும்பத்தினா் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தனராம். இதையடுத்து, அவா் மேற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை தனது மகளுடன் வீட்டு முன் நின்றிருந்த முத்துலட்சுமியிடம், சின்னராஜ், அவரது உறவினா் செண்பகவேல் மகன் பொன்னுத்துரை, செ.ராஜதுரை, மேலும் இருவா் சோ்ந்து தகராறு செய்ததுடன், வீட்டு வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டின் ஜன்னல் கண்ணாடி, குத்துவிளக்கு, பீரோல் கண்ணாடி, தொலைபேசி ஆகியவற்றை சேதப்படுத்தினராம். அவா்களது நாயையும் கல்லால் தாக்கினராம்.
இதுகுறித்து, முத்துலட்சுமி வியாழக்கிழமை அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சின்னராஜ் உள்பட 5 பேரையும் தேடி வருகின்றனா்.