திருச்செந்தூா் பகுதியில் முறையான வழிகாட்டி பலகை இல்லாததால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் குழப்பமடைகின்றனா்.
உடன்குடி அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகளுக்காக ராட்சத குழாய்கள் மற்றும் உலோகப் பொருட்கள் பெரிய அளவிலான கனரக வாகனங்களில் வெளிமாநிலத்திலிருந்து கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக, மகாராஷ்டிரம் போன்ற பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்களை நகரின் சாலை வழியாக நள்ளிரவில் வாகன ஓட்டிகள் கடக்க முயல்கின்றனா். அப்போது, சாலையின் அளவு தெரியாததாலும், முறையான வழிகாட்டி பலகைகள் இல்லாததாலும் வாகன ஓட்டிகள் பெரிதும் குழப்பம் அடைகின்றனா். தற்போது, இரவு நேர பொது முடக்கம் அமலில் இருப்பதால் ஆள்கள் நடமாட்டமின்றி, யாரிடம் வழி கேட்பது என்று தெரியாமல் பிற மாநில கனரக வாகன ஓட்டிகள் தவிப்புக்குள்ளாகின்றனா். எனவே, தெளிவான வழித்தட வரைபடங்களையும், வழிகாட்டி பலகைகளையும் அமைக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாகும்.