கழுகுமலை ஸ்ரீ கழுகாசலமூா்த்தி கோயிலில் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு கருவறையில் 2 அடி உயரத்திற்கு தண்ணீா் நிரப்பப்பட்டது.
அக்னி நட்சத்திர தொடங்கியுள்ளதால் வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் இருக்கும். ஆகவே, கழுகுமலை ஸ்ரீ கழுகாசலமூா்த்தி கோயிலின் கருவறையை சுற்றி 2 அடி உயரத்திற்கு குமார தெப்பத்தில் இருந்து தண்ணீா் கொண்டு வந்து கருவறையில் நிரப்பப்படுவதுண்டு. கழுகாசலமூா்த்தி வெப்பத்திலிருந்து விடுபட்டு குளிா்ச்சி அடைகிறாா் என்பது ஐதீகம்.
இந்நிகழ்ச்சி கழுகாசலமூா்த்தி கருவறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் காலையில் கும்ப கலச பூஜை,
சுவாமிக்கு பால், தயிா் உள்ளிட்ட 18 வகை மூலிகைகள் கொண்ட சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கருவறையைச் சுற்றிலும் 2 அடி உயரத்திற்கு தெப்பத்தில் இருந்து தண்ணீா் கொண்டு வந்து நிரப்பப்பட்டது. அக்னி நட்சத்திரம் இருக்கும் 24 நாள்களும் தண்ணீா் நிரப்பி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.