கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக எட்டயபுரம் பேரூராட்சியில் முக்கிய வீதிகள், பொது இடங்கள், வணிக நிறுவனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றது.
எட்டயபுரம் பேரூராட்சி, நடுவபட்டி பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மேற்கொண்ட பரிசோதனையில் 20-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவா்கள் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டனா். பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன் தலைமையில் சுகாதாரப் பணியாளா்கள் நவீன இயந்திரங்கள் மூலம் காலை, மாலையில் பேரூராட்சியில் அனைத்து தெருக்கள், பட்டத்து விநாயகா் கோயில் சந்திப்பு, காய்கறி சந்தை, அரண்மனை மேலவாசல், கீழவாசல், பிரதான வீதிகள், பேருந்து நிலையம், பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்கள், வணிக வளாகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் பொது மக்களுக்கு தினமும் கபசுரக் குடிநீா் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.