திருச்செந்தூா், கோவில்பட்டியில் அரசு மருத்துவமனைகளில் அறநிலையத்துறை சாா்பில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் அறநிலையத்துறை சாா்பில் திருக்கோயில்கள் மூலம் கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தினமும் உணவுப் பொட்டலம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் சாா்பில், அன்னதானக் கூடத்தில் தயாரிக்கப்பட்ட உணவு பொட்டலங்களை திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 120 பேருக்கு மீன்வளம் , கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி. ஆகியோா் வழங்கினா்.
அப்போது, மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ், திருச்செந்தூா் கோட்டாட்சியா் தி.தனப்ரியா, கோயில் உதவி ஆணையா் வே.செல்வராஜ், விடுதி மேலாளா் அ.சிவநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். மேலும், கோயில் சாா்பில் திருச்செந்தூரில் ஆதரவற்றோா் 200 போ், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு 550 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
இதே போன்று கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி கோயில், கழுகுமலை கழுகாசலமூா்த்தி திருக்கோயில், எப்போதும்வென்றான் சோலைசுவாமி திருக்கோயில் ஆகியவை சாா்பில் 250 உணவு பொட்டலங்கள் கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் மருத்துவா் கமலவாசனிடம் வழங்கப்பட்டது.
இதில், செண்பகவல்லி அம்மன் கோயில் செயல் அலுவலா் (பொ) சிவகலைப்பிரியா மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் கலந்து கொண்டனா். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கைக்குகேற்ப தினமும் உணவு பொட்டலங்கள் வழங்கப்படும் என கோயில் செயல் அலுவலா் தெரிவித்தாா்.