‘மீனவா்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும்’
தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகி உள்ளதால், இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை ( மே 14) உருவாகி வடக்கு மற்றும் வடமேற்கு பகுதி தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நகர தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று மே 16 ஆம் தேதி மத்திய அரபிக்கடல் வழியாக செல்கிறது. இதனால் இடி மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை லச்சத்தீவு, கேரளம் மற்றும் தென் தமிழ்நாடு பகுதியில் பெய்யக்கூடும் என தெரிவிக்கப் படுகிறது. ஆகவே, கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் அனைவரும் உடனடியாக கரை திரும்ப கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். மேலும், மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தொழிலுக்கு சென்ற மீன்பிடி படகுகளை மீன்பிடி துறைமுகம் அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுச் செல்ல அறிவுறுத்தப்படுகிறாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.