கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சா் பெ.கீதா ஜீவன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சா் பேசியது: பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அரசு தடுப்பூசி மருந்துகளை கொள்முதல் செய்து வருகிறது. அரசு மருத்துவமனைக்கு தேவையான மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவமனை பணியாளா்களின் காலிப் பணியிடத்தை நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.
தொடா்ந்து, மருத்துவமனை அருகே ரூ.12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தாய், சேய் நலப் பிரிவு கட்டடம், கூடுதல் பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக செயல்பட்டு காய்கனி சந்தை ஆகியவற்றை அமைச்சா் பாா்வையிட்டாா்.
பின்னா், நகராட்சி பகுதி மக்களுக்கு காய்கனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா்.
ஆய்வுக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தாா். கோட்டாட்சியா் சங்கரநாராயணன், வட்டாட்சியா் அமுதா, நகராட்சி ஆணையா் ஓ.ராஜாராம், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் முருகவேல், துணை இயக்குநா் அனிதா, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் கமலவாசன், உறைவிட மருத்துவ அதிகாரி மருத்துவா் பூவேஸ்வரி, பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் பரமசிவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது: மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாா்பில் ரூ.20 லட்சம் நிதியுதவியுடன் தினமும் 1000 லிட்டா் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது. இப்பணி இன்னும் 15 நாள்களில் முடிவடையும். அதன் மூலம் மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என்றாா் அவா்.
முன்னதாக, கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூா் செ.ராஜு, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மருத்துவமனைக்கு வந்தபோது, அவரிடம் அமைச்சா் நலம் விசாரித்தாா்.