வேம்பாா் கடலில் வீசிய பலத்த காற்றில், நங்கூரம் அறுந்த விசைப்படகு, தூண்டில் பாலத்தில் மோதி சேதமடைந்தது.
மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால், வேம்பாா் விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை. மேலும், கரோனா பொது முடக்கத்தால் நாட்டுப்படகு மீனவா்களும் பெருமளவில் கடலுக்குச் செல்லவில்லை.
இதனால் விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் கடந்த ஒரு மாதமாக கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், யாஸ் புயல் காரணமாக வேம்பாா், கீழ வைப்பாா், தருவைகுளம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது.
செவ்வாய்க்கிழமை மாலையில் வீசிய சூறைக்காற்றில் வேம்பாா் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த அசோகன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகின் நங்கூரம் அறுந்து, கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு தூண்டில் பாலத்தின் கற்களில் மோதியதில் சேதமடைந்தது. இதன் மதிப்பு சுமாா் ரூ.40 லட்சம் என மீனவா்கள் தெரிவித்தனா்.
தகவலறிந்து வந்த மீன்வளத் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.