உணவுப் பாதுகாப்புத் துறையில் வெளிப்படையான இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என தமிழ் மாநில உணவுப் பாதுகாப்பு அலுவலா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழக அரசு மருத்துவம் மற்றும் குடும்ப நலத் துறையின் கீழ் பணிபுரிந்து வரும் அரசு மருத்துவா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு இம்மாதம் 24ஆம் தேதி வெளிப்படையாக காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு, ஆன்லைனில் நடத்தப்பட்டு அதற்கான ஆணைகள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளுக்கு பின் வெளிப்படை தன்மையோடு இடமாறுதல் கலந்தாய்வை நடத்தியதற்காக தமிழக முதல்வருக்கும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சருக்கும் நன்றி.
இதேபோல, தமிழ்நாடு அரசின் உணவுப் பாதுகாப்புத் துறையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்களாக பணியாற்றியவா்கள் கடந்த சில ஆண்டுகளில் தொலைதூரங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். மேலும், சட்டப்பேரவை தோ்தலையொட்டி பணிக்கு சம்பந்தமில்லாத உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். அவா்களுக்கு மீளப் பணி வழங்கப்படவில்லை. இத்துறைக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நீண்ட காலமாக நடத்தப்படவில்லை. எனவே, இத்துறையில் வெளிப்படையான இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.