தூத்துக்குடியில் மீனவர்கள் 4வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் மீன்பிடித்துறைமுகத்தில் விசைப்படகுகளை நிறுத்தி வைத்துள்ளன.
மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்காள விரிகுடா, குமரிக்கடல் மற்றும் தமிழக கடற்கரை பகுதியில் கடந்த வெள்ளி முதல் இன்று வரை தொடர்ந்து 4 நாள்கள் கடலில் 40 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. எனவே மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடற்கரை பகுதியில் 40கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தது.
இதனால் தூத்துக்குடியில் மீனவர்கள் கடந்த 4 நாள்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தூத்துக்குடி மீன்பிடித்துறைமுகத்தில் விசைப்படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மீனவர் தர்மபிச்சை செய்தியாளர்களிடம் கூறுகையில், 1969 இல் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் துவக்கப்பட்டது. துவங்கிய நாளிலிருந்து தற்போது வரை மீனவர்களுக்கான எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என குற்றம்சாட்டி அவர், தற்போது முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் திமுக தலைவர் முக ஸ்டாலின் எங்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என குறிப்பிட்டார்.
குறிப்பாக டீசல் விலை அதிகரிப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர். இதில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் மீனவர்களுக்கு ஓய்வூதியம் நலவாரியம் மூலம் அறிவிக்கப்பட்டும் அது தற்போது வரை செயல்படுத்தப்படவில்லை. கட்டுமான தொழிலாளர்களுக்கு நடமாடும் மருத்துவமனை அமைத்து கொடுத்தது போல மீனவர்களுக்கும் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றார். மீனவர்கள் கூட்டுறவு சங்கம் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளதால் அதை மூன்றாக பிரித்து அதன் மூலமாக கிடைக்கவேண்டிய அரசாங்க சலுகைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றார்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இயற்கை சீற்றங்களால் மூன்று வாரங்களாக கடலுக்குச் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது அரசு உடனடியாக இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என மீனவர் தர்மபிச்சை தெரிவித்தார்.