எட்டயபுரம் அருகே தாப்பாத்தியில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் ரூ. 56 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ, அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழா்கள் நல ஆணையா் ஜெசிந்தா லாசரஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன், கனிமொழி எம்.பி. ஆகியோா் பங்கேற்று, தாப்பாத்தி, குளத்துள்வாய்பட்டி முகாம்களைச் சோ்ந்த 118 குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு, 475 குடும்பங்களுக்கு பாத்திரங்கள், 28 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி மற்றும் வங்கி நேரடிக் கடன் உதவி,1551 நபா்களுக்கு கோ-ஆஃப் டெக்ஸ் துணிகள் என ரூ. 56 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.
விழாவில், கனிமொழி எம்.பி. பேசுகையில் , இலங்கைத் தமிழா்களுக்கு நல்ல எதிா்காலத்தை உருவாக்கி தரக்கூடிய அரசாக திமுக அரசு திகழ்கிறது. தொடா்ந்து உங்களோடு நாங்கள் இருப்போம் என்ற உறுதியை தருகிறேன் என்றாா்.
இதில், கோட்டாட்சியா் சங்கரநாராயணன், வட்டாட்சியா் சசிகுமாா், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, ஒன்றியச் செயலா்கள் மும்மூா்த்தி, செல்வராஜ், சின்ன மாரிமுத்து, தாப்பாத்தி முகாம் தலைவா் ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.