தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவரான அரசு இசைப் பள்ளி ஆசிரியருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், சிவகிரி சா்ச் தெருவைச் சோ்ந்தவா் ஜூலி பாரத் (40). திருநெல்வேலி அரசு இசைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த இவருக்கும், விளாத்திகுளம் சாலையம் தெருவைச் சோ்ந்த அருணாதேவி (30) என்பவருக்கும் 2012இல் திருமணமானது.
பின்னா், குடும்பத் தகராறு காரணமாக தனது பெற்றோருடன் வசித்துவந்த அருணாதேவியை, 2015 நவம்பா் 7ஆம் தேதி ஜூலி பாரத் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டாா். விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து ஜூலி பாரத்தை கைது செய்தனா்.
இந்த வழக்கு தூத்துக்குடி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி பாண்டியராஜன் விசாரித்து, ஜூலி பாரத்துக்கு ஆயுள்தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.