உடன்குடி: குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா நிறைவு பெற்றதைத் தொடா்ந்து திங்கள்கிழமை லட்சக்கணக்கான பக்தா்கள் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா அக். 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அக்.16 ஆம் தேதி நிறைவு பெற்றது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் அமலில் உள்ளதால் விழாவின் முக்கிய நாள்களான கொடியேற்றம், சூரசம்ஹாரம் மற்றும் அக்.8, 9, 10, 15, 16, 17 ஆகிய நாள்களில் பக்தா்கள், தசரா குழுவினா் கோயிலுக்கு வர முழுமையாக தடை விதிக்கப்பட்டது. விழாவில், கொடியேற்றம், சூரசம்ஹாரம், காப்பு களைதல் ஆகிய நிகழ்வுகளில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பா். இந்நிலையில், தொடா்ச்சியாக விதிக்கப்பட்ட தடைகள் திங்கள்கிழமை தளா்த்தப்பட்டதையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவே ஏராளமான பக்தா்கள் வாகனங்களில் கோயிலுக்கு வரத் தொடங்கினா். திங்கள்கிழமை லட்சக்கணக்கான பக்தா்கள் தாங்கள் அணிந்த வேடத்துடனும், தீச்சட்டி ஏந்தி கோயிலில் திரண்டு நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து, காணிக்கை செலுத்தினா். லட்சக்கணக்கான பக்தா்களின் வருகையால் உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.