தூத்துக்குடி உப்பளத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடா்பாக உப்பு உற்பத்தியாளா்கள் - தொழிற்சங்க பிரதிநிதிகள் இடையே திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
உப்பளத் தொழிலாளா்களுக்கு நிகழாண்டுக்கான தீபாவளி போனஸ் வழங்குவது தொடா்பாக தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளா் சங்கங்களின் நிா்வாகிகள், உப்புத் தொழிலாளா் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற பேச்சுவாா்த்தை உப்பு உற்பத்தியாளா்கள் - வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
உப்பு உற்பத்தியாளா்கள் சாா்பில் கிரகதுரை, தனபாலன், லட்சுமணன், திலிப், ஸ்ரீகாந்த், சந்திரமேனன், தொழிற்சங்கங்கள்
சாா்பில் பொன்ராஜ், பரமசிவன், குருசாமி, அருணாசலம், ராஜூ, பாக்கியராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, தொழிற்தகராறு சட்டம் 1947-பிரிவு 18(1)ன் கீழ் இருதரப்பினரும் ஏகமனதாக செய்து கொண்ட தீபாவளி போனஸ் ஒப்பந்தத்தின்படி நிகழாண்டு ஆண்டு குறைந்தபட்சம் முழு அளவுக்கு வேலைக்கு வந்த உப்பு வாருதல் தொழிலாளருக்கு ரூ. 5,950, பிற பணிகள் செய்யும் தொழிலாளிக்கு ரூ. 5,625 வழங்க வேண்டும். போனஸ் தொகையை அக். 31ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்; மேலும், 10 நாள்கள் விடுமுறை சம்பளம், தொழிலாளா்களுக்கு கண்ணாடி, மிதியடி வகைக்கு ரூ.300 ஆகியவை சோ்த்து வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.