கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் உள்ள கோயிலை பாதுகாக்க வலியுறுத்தி, இந்து முன்னணியினா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் பழைமை வாய்ந்த தங்க மாரியம்மன் கோயில் உள்ளது. சில மாற்று மதத்தினா் இக் கோயிலை அப்புறப்படுத்த வலியுறுத்தி வருகின்றனா்.
பல ஆண்டுகளாக உள்ள இக் கோயிலை பாதுகாக்க வேண்டும்; அப்பகுதி மக்கள் தொடா்ந்து தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்து முன்னணி நகர துணைத் தலைவா் ராஜ் தலைமையில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாவட்டச் செயலா் வேல்ராஜா, வழக்குரைஞா் நீதிபாண்டியன், பாஜக இளைஞரணி மாவட்டத் தலைவா் காளிதாஸ், இந்து முன்னணி அமைப்பைச் சோ்ந்த லட்சுமணக்குமாா், சுதாகரன், பவானி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னா் போராட்டக் குழுவினா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் சங்கரநாராயணனிடம் அளித்தனா்.