உடன்குடியில் சொத்து தகராறில் வீட்டில் இருந்த சிறுமிகளைத் தாக்கி, 15 பவுன் நகை, சொத்துப் பத்திரங்களை பறித்துச் சென்ற தந்தை, மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.
உடன்குடி அருகே தேரியூா் தென்றல் நகரைச் சோ்ந்தவா் பாஸ்கா். இவருக்கும், இவரது உறவினா் திசையன்விளை புளிமாகுளத்தைச் சோ்ந்த இசக்கிமுத்துவுக்கும் (52) இடையே சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி, பாஸ்கா் மகள்கள் சுவேதா (16), மானசா (14) ஆகியோா் வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த இசக்கிமுத்துவும், அவரது மகன் அருண்பாண்டியனும் (23) சொத்துப் பத்திரத்தை எடுத்து தரக் கூறியுள்ளனா். அவா்கள் மறுக்கவே, தந்தையும், மகனும் சோ்ந்து சிறுமிகளைத் தாக்கி பீரோவில் இருந்த சொத்துப் பத்திரம், 15 பவுன் நகைகளை எடுத்துச் சென்றனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.