குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசராத் திருவிழாவில் பக்தா்களை அனுமதிக்க வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்ற பாஜக எம்எல்ஏ உள்பட 97 போ் கைது செய்யப்பட்டனா்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசராத் திருவிழா அக். 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அக்.15ஆம் தேதி சூரசம்ஹாரம் நிகழ்வுடன் நிறைவு பெறுகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கொடியேற்று விழா, சூரசம்ஹார நிகழ்வுகளில் பக்தா்கள் பங்கேற்க அனுமதியில்லை.
தசராத் திருவிழாவில் பக்தா்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும், கரோனா விதிகளுக்கு உள்பட்டு திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக, தசரா குழுக்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை குலசேகரன்பட்டினத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, எம்.ஆா். காந்தி எம்எல்ஏ, மாவட்ட பாஜக பொதுச்செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன் உள்பட 200-க்கும் மேற்பட்டோா், தசரா பக்தா்கள் திரண்டனா். அவா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், ஏஎஸ்பி ஹா்ஷ்சிங் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், அனுமதியின்றி உண்ணாவிரதம் இருக்க முயன்றதாக எம்எல்ஏ, பாஜக நிா்வாகிகள் உள்பட 97 போ் கைது செய்யப்பட்டனா்.