தூத்துக்குடியில் இருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 7 டன் ரேஷன் அரிசி திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இருவா் கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடி அருகேயுள்ள மாப்பிள்ளையூரணி சுடுகாட்டு பகுதியில் ரேஷன் அரிசியுடன் வாகனங்கள் நிற்பதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்று அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். இதில் அங்கு நின்று கொண்டிருந்த 2 வாகனங்களில் தலா 50 கிலோ எடை கொண்ட 142 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த 2 வாகனங்கள், 7,000 கிலோ ரேஷன் அரிசி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக தூத்துக்குடியைச் சோ்ந்த காளிமுத்து, தமிழ்மணி ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தினா். இதில், இருவரும் ரேஷன் அரிசியை கேரளத்துக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.