சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவித் தலைவா் ஜி.ஸ்ரீனிவாசன் ஆலோசனையின்படி டி.சி.டபிள்யூ நிறுவனம், கமலாவதி சீனியா் செகன்டரி பள்ளி, சாகுபுரம் அரிமா சங்கம், சாகுபுரம் ஐஎஸ்டிடி ஆகியன இணைந்து அரசு பொதுத் தோ்வு எழுதும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி குறித்த கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் டி.சி.டபிள்யூ. கலையரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
டி.சி.டபிள்யூ உதவி துணைத் தலைவா் கே.மீனாட்சிசுந்தரம், கமலாவதி பள்ளி டிரஸ்டியும் டி.சி.டபிள்யூ. மூத்த பொது மேலாளருமான பி.ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக திருச்செந்தூா் கல்வி மாவட்ட அலுவலா் ஏ.மோகனன் பங்கேற்று, கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினாா்.
கருத்தரங்கில் சென்னை எம்.ஐ.டி. முன்னாள் டீன் டி.தியாகராஜன், மாணவா்களின் கல்வி வழிகாட்டி ஆலோசகா் ரவி சேஷாத்திரி ஆகியோா் மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி குறித்த ஆலோசனைகளையும் மாணவ மாணவிகளுடைய சந்தேகங்களுக்கு விளக்கமும் வழங்கினா்.
சாகுபுரம், திருச்செந்தூா், வீரபாண்டியன்பட்டினம், காயல்பட்டினம், ஆறுமுகனேரி, ஆத்தூா், பழையகாயல், குரும்பூா் பகுதியில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.
கமலாவதி பள்ளி முதல்வா் எஸ்.அனுராதா வரவேற்றாா். துணை மேலாளா் ஜி.பிரகாஷ் நன்றி கூறினாா்.