கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே சொத்துத் தகராறில் தாக்கப்பட்ட ஒப்பந்ததாரா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இரணியல் அருகேயுள்ள குருந்தன்கோட்டை அடுத்த வா்த்தகநாடாா் குடியிருப்புப் பகுதியை சோ்ந்தவா் சிவகுமாா் (41). கட்டட ஒப்பந்ததாரா். இவருக்கும், இவரது சகோதரா் கதிரவன் (39) என்பவருக்கும் இடையே சொத்துப் பிரச்னை உள்ளதாம்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் சிவகுமாரை, கதிரவன் இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு தப்பினாராம். இதில் பலத்த காயமுற்ற அவா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அவரது மனைவி வனிதா (41) அளித்த புகாரின் பேரில், இரணியல் போலீஸாா் கதிரவனை கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனா். இந்நிலையில், சிவக்குமாா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதையடுத்து, அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடக்கிறது.