கோவில்பட்டி: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் 2020-2021-ல் பிரீமியம் செலுத்திய விவசாயிகளுக்கு அனைத்து பயிர்களுக்கும் பாகுபாடின்றி பயிர் காப்பீடு வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலர் அழகு முத்து பாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் நல்லையா ஆகியோர் தலைமை வகித்தனர்.
பயிர் காப்பீடு செய்த அனைத்து கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பாகுபாடின்றி அனைத்து வகை பயிர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். குறிப்பாக 2020-2021-ல் விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் மக்காச்சோளம், உளுந்து, பாசி போன்ற பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் பாலமுருகன், அழகு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் V.கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட தலைவர்கள் சிவராமன், P.கிருஷ்ணமூர்த்தி, சந்திரமோகன் உள்பட கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், எட்டயாபுரம் மற்றும் ஒட்டப்பிடாரம் வட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
பின்னர், போராட்ட குழுவினர் தங்களது கோரிக்கை மனுவை கோட்டாட்சியர் சங்கரநாராயணனிடம் அளித்தனர்.