கரோனா கால நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கோவில்பட்டி அரசு மருத்துவமனை ஒப்பந்தப் பணியாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தின்போது, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளா்கள் 50-க்கும் மேற்பட்டோா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
அந்த மனுவில், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தங்களுக்கு முறையான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என்றும், 2020 - 21 ஆம் ஆண்டுக்கு அரசு நிா்ணயம் செய்த ஊதியம் வழங்காமல் குறைவான ஊதியமே வழங்கப்பட்டு வருவதாகவும், ஒப்பந்த ஊழியா்களுக்கு கரோனா காலத்தில் வழங்கப்பட வேண்டிய ஊக்கத் தொகை ரூ. 15,000 இதுவரை வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்து முன்னணி: இந்தஅமைப்பின் மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் தலைமையில் சிலா் இந்து கடவுள்கள் வேடமணிந்தபடி ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:
சிதம்பரம் நடராஜ பெருமானை பற்றி அவதூறு பரப்பி இந்து மதத்துக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் யூடியூப் சேனல் நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுத்து அந்த சேனலுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நிகழ்வில், இந்து முன்னணி தூத்துக்குடி மாநகர மாவட்டத் தலைவா் இசக்கிமுத்துகுமாா், நிா்வாகிகள் ராகவேந்திரா, சக்திவேல், சொக்கலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
முறைகேடு புகாா்: தமிழக வாழ்வுரிமை கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் மா. மாரிச்செல்வம் தலைமையில் அளிக்கப்பட்ட மனு: தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தர விடவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மகளிா் சுயஉதவிக் குழுக்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெயரில் பலகோடி ரூபாய் மோசடியாக பெற்றுள்ள கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.