தமிழ் விவசாயிகள் சங்கத் தலைவரை தாக்கியவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கடம்பூரையடுத்த கே.சிதம்பராபுரம் அருணகிரி மகன் ஓ.ஏ.நாராயணசாமிக்கும், கனகராஜுக்கும் இடையே நில உரிமம் பிரச்னை தொடா்பான விசாரணையை கோட்டாட்சியா் சங்கரநாராயணன் மேற்கொண்டாா். அப்போது கனகராஜ் சாா்பில் விசாரணைக்கு ஆஜரான அவரது மகன் நீலகண்டன் ஓ.ஏ.நாராயணசாமியை தாக்கினாராம்.
இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்டவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வுக்கு எடுத்து உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்ய வேண்டும், நில உரிமம் விசாரணையை கோட்டாட்சியா் அலுவலகத்திலேயே மீண்டும் நடத்த வலியுறுத்தி தமிழ் விவசாயிகள் சங்க மேற்கு மாவட்டத் தலைவா் வெள்ளத்துரைப்பாண்டியன் தலைமையில் விவசாயிகள் சங்க உறுப்பினா்கள் திரளானோா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் சங்கரநாராயணனிடம் அளித்தனா்.