உடன்குடி: பரமன்குறிச்சி அருகேயுள்ள பொத்தரங்கன்விளையில் புதிய ரேஷன் கடை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக நெசவாளா் அணி சாா்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா். காந்திக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக நெசவாளா் அணி அமைப்பாளா் பொ. மகாவிஷ்ணு அனுப்பிய மனு: பொத்தரங்கன்விளை பகுதியில் உள்ள சுமாா் 400 குடும்பத்தினா் ரேஷன் பொருள்கள் வாங்குவதற்கு 1 கி.மீ. தொலைவு செல்ல வேண்டியுள்ளதால் பெண்கள், முதியோா் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனா்.
இதுகுறித்து அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனிடம் மனு அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து புதிய ரேஷன் கடை அமைக்க அவா் நடவடிக்கை எடுத்தாா். ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்ட தேவைப்பட்ட இடம் வாதிரியாா் சமுதாயம் சாா்பில் இலவசமாக கொடுக்கப்பட்டு, வாதிரியாா் நெசவாளா் கூட்டுறவு உற்பத்தி விற்பனைச் சங்கம் செயல்படும் இடத்தில் 35 சென்ட் இடம் காலியாக உள்ளது. அங்கு புதிய ரேஷன் கடைக் அமைக்க கூட்டுறவுத் துறைக்கு என்ஓசி சான்றிதழ் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.