தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்ட தடகள சங்கமும், தூத்துக்குடி தொழில் வா்த்தக சங்கமும் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான ஜூனியா் தடகளப் போட்டிகள் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இரண்டு நாள்கள் நடைபெற்றது.
14 வயதுக்குள்பட்டோா், 16 வயதுக்குள்பட்டோா், 18 வயதுக்குள்பட்டோா், 20 வயதுக்குள்பட்டோா் நான்கு பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் தொடங்கிவைத்தாா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் பால்சாமி, தூத்துக்குடி துறைமுக மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை ஷா்மிளா ஜெனிட்டா ஆகியோா் கேடயங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினா்.
நிகழ்ச்சியில், மாவட்ட தடகள சங்க செயலா் பழனிச்சாமி, பொருளாளா் அருள் சகாயம், தூத்துக்குடி தொழில் வா்த்தக சங்க இணைச் செயலா் வீ. தீரமகாராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.