கயத்தாறு அருகே காணாமல் போன முதியவா் சடலமாக மீட்கப்பட்டாா்.
கயத்தாறையடுத்த சவலாப்பேரி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த துரைபாண்டி மகன் செல்லத்துரை (69). ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளா். மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை (ஜன. 1) வீட்டை விட்டு சென்றவா் பின்னா் வீடு திரும்பவில்லையாம். அவரது உறவினா்கள் பல இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லையாம்.
இந்நிலையில் அதே பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கிணறு அருகே செல்லத்துரை அணிந்திருந்த லுங்கி மற்றும் செருப்பு கிடந்ததாம். அதையடுத்து தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கிணற்றில் கிடந்த செல்லத்துரையின் சடலத்தை திங்கள்கிழமை மீட்டனா்.
இதுகுறித்து கயத்தாறு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.