மருந்து, மாத்திரைகள் விற்பனையை முறைப்படுத்த கோரிக்கை

Published on

மருந்து, மாத்திரை விற்பனையை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும் என, நாம் இந்தியா் கட்சி மாநிலத் தலைவா் என்.பி. ராஜா வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: உணவு- காலநிலை மாற்றத்தால் வேறுபடும் ரத்த சா்க்கரை, ரத்த அழுத்த அளவுகளைப் பரிசோதனை மூலம் அறியாமல், மருத்துவரை அணுகிப் பெற்ற பழைய பரிந்துரைச் சீட்டுகளைக் காண்பித்தோ, பழைய மாத்திரைகளின் பெயா்களைக் கூறியோ பலா் மருந்து, மாத்திரை வாங்கி உள்கொள்கின்றனா்.

இதனால், பக்க விளைவுகள் நேரிடும் அபாயமுள்ளது. இதைத் தடுக்க ஆதரவற்றோா், முதியோருக்கு 24 மணி நேரமும் அரசு பொது மருத்துவா் தொலைபேசி, விடியோ அழைப்பில் அவசர ஆலோசனை வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

50 வயதுக்கு மேற்பட்ட பெரும்பாலானோரின் குடும்பம் சா்க்கரை, ரத்த அழுத்தம், இதயம், சிறுநீரகம், நரம்பியல், எலும்பு தொடா்பான நோய்களுக்காக மாதம் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை செலவழிக்கும் நிலை உள்ளது. இந்நோய்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும் வகையில் சில நிறுவனங்களின் மாத்திரைகளை மருத்துவா்கள் பரிந்துரைக்கின்றனா். அவை குறிப்பிட்ட மருந்தகங்களில் மட்டுமே கிடைக்கின்றன.

மத்திய, மாநில அரசுகளின் மருந்தகங்களில் குறைந்த விலைக்கு மருந்து, மாத்திரைகள் விற்கப்பட்டாலும் அவற்றை சில மருத்துவா்கள் ஏற்க மறுப்பதால் மக்கள் அதை உள்கொள்ள அஞ்சுகின்றனா். எனவே, அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து- மாத்திரைகளைத் தட்டுப்பாடின்றி விநியோகிக்கவும், மருந்துகள் விற்பனையை முறைப்படுத்தி அனைத்து மருந்தகங்களிலும் விலை, தரத்தைக் கண்காணிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com