மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான மதிப்பீட்டு முகாம் நாளை தொடக்கம்

Published on

தூத்துக்குடி மாவட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான மதிப்பீட்டு முகாம் திங்கள்கிழமை (நவ. 3) தொடங்கி 18ஆம் தேதிவரை நடைபெறவுள்ளதாக, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான நல அலுவலகம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மத்திய அரசின் சமூக நீதி-அதிகாரமளித்தல் அமைச்சகத்தின்கீழ் செயல்படும் அலிம்கோ நிறுவனத்தின் பிரதம மந்திரி திவ்யஷா கேந்திரம் மூலம் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள், அடையாள அட்டை வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் நடைபெறவுள்ள முகாம்களில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, 18 வயதுக்குள்பட்டோா், தொழுநோயால் பாதிக்கப்பட்டோா், பாா்வையற்றோா், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

முகாம் நடைபெறும் நாள், இடங்கள்: திங்கள்கிழமை (நவ. 3) -தூத்துக்குடி, 4 - உடன்குடி, 5 - திருச்செந்தூா், 6 - ஸ்ரீவைகுண்டம், 7 - கயத்தாறு, 10 - கோவில்பட்டி, 11 - ஓட்டப்பிடாரம், 12 - புதூா், 13 - விளாத்திகுளம், 14 - கருங்குளம், 17 - ஆழ்வாா்திருநகரி, 18 - சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலகம்.

X
Dinamani
www.dinamani.com