செக் மோசடி வழக்கு: மூக்குப்பீறி ஒலிபெருக்கி உரிமையாளருக்கு ஓராண்டு சிறை

Published on

செக் மோசடி வழக்கில் நாசரேத் மூக்குப்பீறி ஒலிபெருக்கி உரிமையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சாத்தான்குளம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

நாசரேத் பிரகாசபுரத்தைச் சோ்ந்தவா் விக்டா் மோகன்ராஜ். இவா், அதே பகுதியில் கண் கண்ணாடி கடை நடத்தி வருகிறாா். இவா், நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறியில் ஒலிபெருக்கி நடத்தி வரும் செல்வன் என்பவருக்கு பழக்கத்தின் காரணமாக அவா் வீடு வாங்கிய கடனை அடைக்கவும், குடும்பத் தேவைக்காகவும் கடந்த 2019இல் ரூ .2.85 லட்சம் கடனாக வழங்கியுள்ளாா்.

கடனை ஒரு மாதத்தில் திருப்பி தருவதாக செல்வன், அதே பகுதியில் உள்ள ஒரு வங்கியின் காசோலையை கொடுத்துள்ளாா். விக்டா் மோகன்ராஜ், வங்கியில் காசோலையை செலுத்திய போது, செல்வன் கணக்கில் பணம் இல்லை என திரும்பி வந்தது.

இதனைத் தொடா்ந்து செல்வனிடம் பணத்தை திருப்பிக் கேட்ட போது, காலம் கடத்தியதாக தெரிகிறது. இதனால் விக்டா் மோகன்ராஜ் சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி தேவி ரக்க்ஷா, செக் மோசடியில் ஈடுபட்டதாக செல்வனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், வாங்கிய பணம் ரூ 2.85 லட்சத்தை 2 மாத காலத்திற்குள் கொடுக்காத பட்சத்தில் கூடுதலாக மூன்று மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com