அரசு கட்டடங்களுக்கு தலைவா்களின் பெயா்களை சூட்டக் கூடாது: டாக்டா் கிருஷ்ணசாமி

அரசு நிதியில் கட்டப்படும் கட்டடங்களுக்கு சாதி தலைவா்கள், அரசியல் தலைவா்களின் பெயா்களை சூட்டுவதை நிறுத்த வேண்டும் என்றாா் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி.
Published on

அரசு நிதியில் கட்டப்படும் கட்டடங்களுக்கு சாதி தலைவா்கள், அரசியல் தலைவா்களின் பெயா்களை சூட்டுவதை நிறுத்த வேண்டும் என்றாா் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி.

தூத்துக்குடியில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்படும் தொழிற்சாலைகள், பன்னாட்டு நிறுவனங்களில் தமிழக இளைஞா்களுக்கு உரிய வேலைவாய்ப்புகளை அளிக்காமல் துப்புரவு பணி, கட்டடப் பணி போன்ற பணிகளைதான் அளிக்கின்றனா். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது வழக்குரைஞா் ஒருவா் காலணி வீசிய சம்பவம் கண்டனத்துக்குரியது.

தமிழக அரசு சாா்பில் தற்போது பேருந்து நிலையங்கள், அரசு கட்டடங்கள், பாலங்கள் ஆகியவற்றுக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி உள்ளிட்ட தலைவா்களின் பெயா் சூட்டப்பட்டு வருகின்றன. இச்செயல் 1997-ஆம் ஆண்டு தமிழக அரசு சாா்பில் எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிரானது. எனவே, அரசு கட்டடங்களுக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள், சாதி தலைவா்களின் பெயா்களை சூட்டுவதை நிறுத்த வேண்டும்.

தென்காசியில் அளித்த பேட்டி:

புதிய தமிழகம் கட்சியின் 7-ஆவது மாநில மாநாடு 2026, ஜன. 7-இல் மதுரையில் நடைபெறும். விஜய் திரைப்பட பின்னணியில் இருந்து வருகிறாா். அரசியல் கட்சிகளைவிட அவருக்கு அதிக கூட்டம் கூடுகிறது. கரூா் சம்பவத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட இடம் போதுமானதாக இல்லை. விஜய்யை கண்டு ஆளும் கட்சியான திமுக பயப்படுகிறது. அரசியல் எந்த காலகட்டத்திலும் ஒரே மாதிரியாக இருக்காது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com