முசிறி வட்டாட்சியரகத்தில் கோரிக்கைகள் தொடா்பாக, திங்கள்கிழமை மனு அளிக்க வந்த 102 பெண்கள் உள்பட 105 போ் கைது செய்யப்பட்டனா்.
தா.பேட்டை ஒன்றியத்திலுள்ளது தலைமலை லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில். இங்கு பக்தா்கள் தங்களது பிராா்த்தனை நிறைவேற வேண்டியும், நிறைவேறிய பிறகும் கால்நடைகளைத் தானமாக வழங்கிச் செல்வது வழக்கம்.
இவ்வாறு வழங்கப்படும் கால்நடைகள் இந்த ஒன்றியத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கும், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கும் வழங்க வேண்டும் எனக் கோரி,, செப்டம்பா் 18- ஆம் தேதி முசிறி வட்டாட்சியரகத்தில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து 200-க்கும் குறைவான மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு கால்நடைகள் வழங்கப்பட்ட நிலையில், மேலும் 250 குழுக்களுக்கும், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கும் வழங்க வேண்டும் என்றும், வெளியூா்களிலிருந்து வரும் பூசாரிகளுக்கு வழங்கக் கூடாது எனக் கோரியும் இந்து அன்னையா் முன்னணியினா், மகளிா் சுய உதவிக் குழுவினா் முசிறி வட்டாட்சியரகத்தில் மனு அளிக்க திங்கள்கிழமை வந்தனா்.
தகவலின் பேரில் அங்கு விரைந்த முசிறி காவல் நிலையத்தினா், 102 பெண்கள் உள்பட 105 பேரைக் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.