அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க தேமுதிக வலியுறுத்தல்
அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக வலியுறுத்தியுள்ளது.
அரியலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அக் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:
அரியலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள திருமானூர், தா.பழூர் பகுதி விவசாயிகளுக்கு இதுவரை எந்தவித சலுகைகளும் கிடைக்கவில்லை. அவர்களுக்கு மற்ற பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஜயங்கொண்டம் - கீழப்பழுவூர் வரை புறவழிச்சாலை அமைக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். கரைவெட்டி திருமானூர், தா.
பழூர் ஆகிய பகுதிகளில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் இராம. ஜெயவேல் தலைமை வகித்தார்.
மாநில பொருளாளர் இளங்கோவன் சிறப்புரையாற்றினார். ஒன்றியம், நகரம், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.