அரியலூர் அருகே காதலித்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
வி.கைகாட்டி அருகேயுள்ள தேளூர் பகுதியைச் சேர்ந்தவர் உஷாராணி (26).
சில ஆண்டுகளுக்கு முன் திருச்சியிலுள்ள ஒரு கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோது, இவரை, தஞ்சை மாவட்டம், சுந்தரம் நகர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (27) என்பவர் காதலித்து வந்தாராம். மேலும், திருமணம் செய்து செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், திடீரென உஷாராணியின் தொடர்பை அருண்குமார் துண்டிக்க முற்பட்டாராம். இதையறிந்த உஷாராணி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அருண்குமாரை வற்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் வி.கைகாட்டி பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த உஷாராணியை, அருண்குமார், அவரது உறவினர்கள் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து உஷாராணி அளித்த புகாரின் பேரில் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், அருண்குமாரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.