அரியலூர் மாவட்டத்தில் நிகழாண்டில் ரூ.23.50 லட்சம் கொடிநாள் வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி.
அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், நிதியை வழங்கி கொடிநாள் வசூலைத் தொடக்கி வைத்து, மேலும் அவர் பேசியது:
தாயகத்தை காக்கும் பணியில் முப்படைகளிலும் பணியாற்றும் படைவீரர்கள், பணியிலிருந்து ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்கள், அவர்களது குடும்பத்தினரை கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7 ஆம் தேதி கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி, நிகழாண்டுக்கான கொடிநாள் தினத்தில் வசூல் செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 2017 ஆம் ஆண்டுக்கான கொடிநாள் வசூல் இலக்காக ரூ.21,36,900 நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அனைத்துத் துறை அலுவலர்களின் ஒத்துழைப்போடு, நிர்ணயித்த இலக்கை எட்டி கூடுதலாக ரூ.6,58,100 வசூல் செய்யப்பட்டது. அதாவது மாவட்டத்தில் ரூ.27,95,000 வசூல் செய்யப்பட்டது.
நிகழாண்டில் ரூ.23,50 லட்சம் கொடிநால் வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை போல கொடிநாள் நிதி வசூலில் அனைத்துறைகளின் ஒத்துழைப்புடன் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கைவிட கூடுதலாக வசூலித்து, சாதனை படைக்க வேண்டும் என்றார் அவர்.
இந்நிகழ்வில், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் கா.குணசேகரன், முன்னாள் படைவீரர் நல அலுவலகக் கண்காணிப்பாளர் ம.கலையரசிகாந்திமதி, உதவியாளர் மு.ஜஸ்டின் திரவியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.