அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரைத் தாக்கிய வழக்கில் 2 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தீபாவளியை முன்னிட்டு ஜயங்கொண்டம் - சிதம்பரம் சாலையில்108 ஆம்புலன்ஸ் நின்று கொண்டிருந்தது. இதன் ஓட்டுநராக தண்டலை கிராமத்தைச் சேர்ந்த சி. ராமானுஜம் (45), மருத்துவ உதவியாளராக திருப்பூரைச் சேர்ந்த ரா. திருமாறனும் (32) பணியில் இருந்தனர்.
அப்போது பைக்கில் வந்த இருவர் ஆம்புலன்ஸை ஒழுங்காக நிறுத்தமாட்டீங்களா எனக் கூறி தகராறில் ஈடுபட்டு திருமாறனை தாக்கிச் சென்றனர். இதனால் பலத்த காயமடைந்த திருமாறன் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். ஜயங்கொண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், தாக்கியவர்கள் நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(20) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவர்களை வியாழக்கிழமை கைது செய்தனர்.