அரியலூர் அருகேயுள்ள இடையத்தான் கிராமத்தில் மானாவாரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற கோடை உழவுப் பணியை சென்னை வேளாண் இயக்குநரக மண்டல வேளாண் அலுவலர் சம்பத் வெள்ளிக்கிழமை ஆய்வ செய்தார்.
இடையத்தான் கிராமத்துக்கு வந்த அவர், அங்கு மானாவாரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்ற கோடை உழவுப் பணியை பார்வையிட்டார். தொடர்ந்து அவர் விவசாயிகளிடம் நடைபெற்ற கலந்துரையாடலில்,கோடை உழவுப் பணிக்கு வழங்கப்பட்ட மானியத் தொகை வங்கி சேமிப்பு கணக்கில் சென்றடைந்துள்ளதா என ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து பருத்தி சாகுபடி செய்யப்பட்ட நிலங்களை பார்வையிட்டு, பருத்தி நுண்சத்து அசோஸ்பைரில்லம் மற்றும் திரவ உயிர் உரம் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கினார்.
பொய்யூர் கிராமத்தில் 2017-18 கூட்டுப்பண்ணையத் திட்டத்தில் உழவர் ஆர்வலர் குழு மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு தீர்மானம், நோட்டு,வங்கி கணக்கு புத்தகங்களை வாங்கியது, வேளாண் கருவிகளை வழங்கியது மற்றும் வேளாண் கருவிகள் வாடகை விட்ட கணக்குகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது வேளாண் துணை இயக்குநர் ரா. பழனிசாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ம. இளங்கோவன், வேளாண் உதவி இயக்குநர் க. பூவலிங்கம்,வேளாண் அலுவலர்கள் சுப்ரமணியன்,வடிவேல், சவிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர். கலந்துரையாடல் ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர் எஸ். சுப்ரமணியன்,அட்மா தொழில் நுட்ப மேலாளர் ந. பழனிசாமி, அட்மா திட்ட தொழில்நுட்ப உதவி மேலாளர் செ. சுந்தரமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.