அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே ஓடும் பேருந்தில் தகராறு செய்து, பெண் பயணிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆயுதப்படை காவலர் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள கண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் . அரியலூர் மாவட்ட ஆயுதப்படை காவலரான இவர், திங்கள்கிழமை மீன்சுருட்டியில் இருந்து ஜயங்கொண்டம் வந்த அரசுப் பேருந்தில் பயணம் செய்தார். அப்போது மது போதையில் சக பயணிகளிடம் தகராறு செய்த அவர், பெண் பயணிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்.
இதுகுறித்து கேட்ட நடத்துநர் ராஜ்குமாரை மணிகண்டன் தாக்கியுள்ளார். இதையடுத்து பேருந்து ஓட்டுநர் பேருந்தை நேராக ஜயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல, அங்கு நடத்துநர் ராஜ்குமார் மற்றும் சக பயணிகள் ஆகியோர் காவலர் மணிகண்டன் மீது புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் புகார் உண்மையென தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (பொ) செல்வராஜ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.