அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள ரெட்டித்தத்தூர் கிராமத்தில் வசிக்கும் மிகவும் பிற்படுத்தபட்ட குடும்பத்தைச் சேர்ந்த 76 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் மு. விஜயலட்சுமி.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இனத்தை சார்ந்தவர்கள் வாழ்க்கையில் முன்னேறும் விதமாக பல எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் சிறந்த திட்டமான இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டத்தில் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ரெட்டித்தத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தைச் சார்ந்தவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இலவச வீட்டுமனை பட்டா தொடர்பான மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் தமிழக அரசின் சீரிய செயல்பாட்டினால் மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தைச் சார்ந்த 76 பேருக்கு ரூ.36 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
இதேபோல, அரியலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இனத்தை சார்ந்த 20,678 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 6.05 கோடியில் கல்வி உதவித்தொகை, கிராமப்புற பெண்களுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகையாக 31,507, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவிகளுக்கு ரூ.196.06 லட்சத்தில் கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.