ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மன்னித்ததால் அவர்களின் விடுதலையை ஏற்கிறோம் என்றார் எம்எல்ஏவும்,காங்கிரஸ் கட்சியின் கொறடாவுமான எஸ். விஜயதரணி.
ரஃபேல் போர் விமான பேர ஊழலை கண்டித்து அரியலூர் பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி:
ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. இதற்கு பதில் அளிக்க வேண்டும் என மக்களவையில் காங்கிரஸ் தலைவர்
வலியுறுத்தியும் பிரதமர் பதில் அளிக்கவில்லை. இதைக் கண்டித்தே இப்போராட்டம் நடக்கிறது.
இனிமேலாவது பிரதமர் பதில் கூற வேண்டும். குறைந்தபட்சம் தமிழக பாஜக தலைவராவது பதிலளிக்க வேண்டும். ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக சட்டப்படி எந்த முடிவெடுத்தாலும் அதை காங்கிரஸ் கட்சி வரவேற்கும். ஆனால், ராஜீவ்காந்தி படுகொலையால் பாதிக்கப்பட்டோர், இறந்தோரின் குடும்பத்தினர் இன்னமும் துயரத்தில்தான் உள்ளனர்.
இருந்தாலும் தலைவர் ராகுல்காந்தி அவர்களை மன்னிப்பதாகக் கூறியதால் அதை நாங்கள் ஏற்கிறோம் என்றார் அவர். ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஒருங்கிணைப்பாளர் வி.கே. அறிவகழன் பேசினார். கட்சியின் மாவட்டத் தலைவர் ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஆர். மனோகரன்,நகரத் தலைவர் ஜாக்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரியலூர்,தா.பழூர்,திருமானூர், செந்துறை,ஜயங்கொண்டம்,ஆண்டிமடம்,தா.பழூர் உள்ளிட்ட பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.