அரியலூர் மாவட்டத்திலுள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் நடைபெற்று வந்த தேர்வுகள் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தையொட்டி மாணவர்களுக்கு 52 நாள் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி அனைத்துப் பள்ளிகளிலும் ஏப். 12-க்குள் தேர்வு நடத்தி முடித்து கோடை விடுமுறை அளித்திட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்ததையடுத்து, 9,10,11 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் முடிந்து மாணவர்களுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டது. இதைத் தொடர்ந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நடைபெற்று வந்த தேர்வுகளும் வெள்ளிக்கிழமையுடன் முடிந்தது. தேர்வெழுதிவிட்டு வெளியே வந்த மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியில் ஒருவருக்கொருவர் தங்களது பேனாக்கள் மூலம் மை தெளித்துக் கொண்டனர். ஏப்ரல் மாதத்தில் 19 நாள்களுடன் மே மாதம் விடுமுறை சேர்த்து 52 நாள்கள் மாணவர்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது. ஜூன் 3 ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.