அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,ஜயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் கட்டமாக வாக்குச் சாவடி தலைமை அலுவலர்களுக்கும், வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர செயல் விளக்கப் பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.
பயிற்சியை சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் கே.ஹெச். குல்கர்னி, மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மு. விஜயலட்சுமி ஆகியோர் பார்வையிட்டனர்.
அப்போது ஆட்சியர் தெரிவித்தது:
மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி ஏற்கெனவே அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2-ஆம் கட்டமாக 1408 வாக்குச் சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் நிலை அலுவலர்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என உறுதி செய்யும் இயந்திரம் குறித்து செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது என்றார் அவர். கோட்டாட்சியர் சத்தியநாராயணன், வட்டாட்சியர் கதிரவன், மண்டல அலுவலர்கள், வாக்குப்பதிவு மைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.