சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பொ. சந்திரசேகர், அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் மற்றும் தா. பழூர் பகுதிகளில் திங்கள்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்கு சேகரிப்பின் போது, அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் பங்கேற்றுப் பேசியது:
அதிமுக ஆட்சியில் தான் அரியலூர் மாவட்டம் வளர்ச்சி பெற்று வருகிறது. இந்தத் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன்,
ஏற்கெனவே எம்.பி-யாக இருந்தபோது அரியலூர் மாவட்ட வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை. ஆகையால் இந்தத் தேர்தலில்
திருமாவளவனுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. எனவே தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அரசு மக்களுக்கு என்றும் ஆதரவாக இருக்கும். எனவே இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின்போது, தேமுதிக மாவட்டச் செயலர் ராமஜெயவேல் மற்றும் பாமக, பாஜக, தமாகா, புதியநீதி கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.