மக்களவைத் தேர்தலையொட்டி, வாக்குப் பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அரியலூர் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 297 வாக்குப்பதிவு மையங்களுக்கான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள், வாக்குப்பதிவு மைய உபகரணங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை அழைத்துச் செல்லப் பயன்படுத்தும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவை அரியலூர் கோட்டாட்சியரக அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முதன்மை உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் கோட்டாட்சியருமான சத்தியநாராயணன் தலைமையில், அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையைத்
திறந்து அந்தந்த வாக்கு பதிவு மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரங்கள் உள்ளிட்டவை காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
காவல் துறையினரின் பாதுகாப்பு வாகனங்கள் முன்னும் பின்னும் செல்ல அரியலூர் சட்டப்பேரவைக்குட்பட்ட 297 வாக்குசாவடிகளுக்கும் வாக்கு பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
இதேபோல குன்னம், ஜயங்கொண்டம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குப் பதிவு மையங்களுக்கும் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.