அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே வெள்ளிக்கிழமை காற்றில் மின்கம்பி உரசியதில் 3 வீடுகள் தீக்கிரையானது.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள கல்லாத்தூர் காவிரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் ராஜேந்திரன்(42). விவசாய கூலி தொழிலாளி. வெள்ளிக்கிழமை இவரது குடிசை வீட்டின் முன் உள்ள மின்கம்பி காற்றில் ஒன்றுடன் ஒன்று உரசியதால் ஏற்பட்ட தீப்பொறி, குடிசையில் பற்றியது. காற்று பலமாக இருந்ததால் மளமளவென்று பரவி, இவரது வீட்டின் அருகே வசித்து வரும் கலியபெருமாள் மகன் ரங்கநாதன், காசிநாதன் மகன் ரவி ஆகியோரின் குடிசை வீட்டிலும் தீ பரவியது. இது குறித்து தகவலறிந்த ஜயங்கொண்டம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். எனினும் குடிசைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. மேலும் 3 வீடுகளிலும் சுமார் ரூ. 5 லட்சத்துக்கு அதிகமான பொருள்கள் சேதமடைந்தன. ஜயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தலிங்கம், ஜயங்கொண்டம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்மோகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.