அரியலூர் அரு கே வயலுக்கு தண்ணீர் விட மறுத்த தம்பியை அண்ணனே வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கில் அண்ணன் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
அரியலூர் அடுத்த வாரணவாசி அருகேயுள்ள பார்ப்பனச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(50). இவருடன் பிறந்தவர்கள் 4 பேர். இந்நிலையில் இவர்களது தந்தை பெயரில் உள்ள நிலத்தை இவர்கள் 4 பேரும் அண்மையில் பாகப்பிரிவினை செய்து கொண்டுள்ளனர். இதில், கோவிந்தராஜின் தம்பி ராமலிங்கம் பாகத்தில் போர்வெல் உள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு கோவிந்தராஜ் பயிர் செய்துள்ள வெண்டைக்காய்க்கு, ராமலிங்கத்திடம் தண்ணீர் விட கேட்டுள்ளார். இதற்கு ராமலிங்கம் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் அரிவாளால் ராமலிங்கத்தை வெட்டியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த ராமலிங்கம் அதே இடத்தில் உயிரிழந்தார். தகவலறிந்த அரியலூர் போலீஸார் கோவிந்தராஜ் மற்றும் அவருக்கு உதவி செய்ததாக அதே ஊரை சேர்ந்த அவரது நண்பர் வெங்கடேசன் (31) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.