அரியலூர் மாவட்டம், வாரணவாசியில் ரூ.2 கோடியில் கட்டப்பட்ட புதை உயிரிப்படிவ அருங்காட்சியகத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
சுற்றுலா மற்றும் பண்பாட்டு மற்றும் அறநிலையங்கள் துறையின் சார்பில், வாரணவாசியில் புதை உயிரிப்படிவ அருங்காட்சியகம் கட்டப்படும் என, 2013- ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ரூ.2 கோடி மதிப்பில் புதை உயிரிப்படிவ அருங்காட்சியகத்துக்கான பணிகள் தொடங்கின. பணிகள் முடிந்து இரண்டு ஆண்டுகள் திறக்கப்படாமல் இருந்த அருங்காட்சியகம் குறித்த செய்தி தினமணியில் வெளியானது.
இதைத் தொடர்ந்து, அருங்காட்சியகத்தை பார்வையிட்டுச் சென்ற அமைச்சர் மா.பா.பாண்டியராஜன்,அருங்காட்சியகத்தை திறக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத்தெரிவித்தார்.
இந்த நிலையில், சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், காணொலிக் காட்சி வாயிலாக க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். இதனையடுத்து, புதை உயிரிப்படிவ அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அரசு தலைமைக்கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், ஜயங்கொண்டம் சட்டப்பேரவை உறுப்பினர், ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜேந்திரன் பேசுகையில், அரியலூர் மாவட்டம், தமிழகத்தில் சிறப்பு வாய்ந்த மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டத்தில் ஏராளமான கனிம வளங்கள் இருப்பதோடு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக கடலாக இருந்ததாகவும், அதற்கான சான்றுகள், மண், மலை முகடு, படிவங்கள் கிடைக்கின்றன.
பல வரலாற்று அறிஞர்களால் கண்டறியப்பட்டதை அறிந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் புதை உயிரிப்படிவ அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிட்டார்.
இந்த அருங்காட்சியகம் மூலம் நம் எதிர்கால சந்ததியினரும், பள்ளி மாணவ, மாணவிகளும் உலகம் தோன்றிய வரலாறு, அறிய பல வரலாற்றுச் சுவடுகள், வரலாற்றுத் தகவல்கள், அரியலூர் மாவட்டம் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கடலாக இருந்ததற்கான தகவல்கள் போன்றவற்றை அறிந்துகொள்ள முடியும் என்றார்.
நிகழ்வில், புவியியல் பிரிவு காப்பாட்சியர் சு.தனலெட்சுமி, புவியியலாளர் சந்திரசேகர் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.